நல்லமருந்து! நம்ம நாட்டு மருந்து! – தொடர் – 53

உப்பு சுவை எனும் ஆறாவது சுவை உணவு பொருட்களின் மருத்துவ குணங்களை பார்ப்போம்..

உப்பு சுவை உணவுப் பொருட்களில் வரிசையில் உள்ள முளைக்கீரை, கீரை வகைகளிலேய தனித்துவமானது.

முளைக்கீரையில் 80 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இதுதவிர, நார்ச்சத்து, மாவுச்சத்து குறிப்பிடும் அளவுகளில் இருப்பதால், உடல் வலுவடைய உதவுகிறது.

முளைக்கீரையுடன் அதிமதுரம் (ஒரு துண்டு), மஞ்சள் (3 சிட்டிகை) மூன்றையும் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.
முளைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் நிரம்பியுள்ளது. மேலும் இதில் தாமிரச் சத்துக்கள் அதிகம் இருக்கிறது. இது நமது உடலில் ஓடும் இரத்தத்தைச் சுத்தம் செய்துவதோடு, இதிலுள்ள மணிச்சத்து நமது மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. எனவே இந்த கீரையைை அதிகம் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

சீதோஷண மாற்றங்கள், கிருமி தொற்று போன்ற காரணங்களால் ஜுரம், காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது. முளைக் கீரையுடன் சீரகத்தை நெய்யில் வறுத்துச் சேர்த்து, சில மிளகாய் வற்றல் கிள்ளிப்போட்டு, தண்ணீர் ஊற்றி அவித்து அந்த சாற்றை வடித்து, சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டால் அனைத்து வகையான காய்ச்சல், ஜுரங்கள் போன்றவை குணமாகும்.

முளைக் கீரை, துத்திக் கீரை இரண்டையும் சம அளவு சேர்த்து அதனுடன் சிறுபருப்பு சேர்த்துக் சமைத்துச் சாப்பிடுவதால் உள் மூலம், பௌத்திரக் கட்டி மூலம், ரத்த மூலம் போன்ற பலவகையான மூல நோய்கள் குணமாகும்.

முளைக்கீரை நல்ல பசியை உண்டுபண்ணக் கூடிய கீரை என்பது சித்த மருத்துவ குறிப்புகளில் உள்ளது.

முளைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்தது சமைத்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறைபாடு தீர்ந்து நல்ல பசி உண்டாகும்.

ருசியின்மை பிரச்சனை உள்ளவர்கள் முளைக் கீரையுடன் சிறிது புளிச்சக் கீரை, மிளகு, மஞ்சள், உப்பு ஆகியவற்றை சேர்த்து, சமைத்து சாப்பிட்டு வந்தால் ருசியின்மை குறைபாடு நீங்கும்.

முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தேவையான வைட்டமின்கள், தாது சத்துகள் உடலுக்குப் போதிய அளவில் கிடைக்கும்.

உயரமாக வளர வேண்டும் என நினைப்பவர்கள் அடிக்கடி முளைக்கீரை சமைத்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முளைக் கீரைச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தித் தூள் செய்து சாப்பிட்டால் பித்தம் அளவு சமசீராகி பித்தம் குறைபாடுகளால் ஏற்படும் மயக்கம் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவை குணமாகும்.

வயிறு குடல்களில் புண்கள் குணமாக முளைக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல்களில் ஏற்பட்டிருக்கும் புண்கள் விரைவில் குணமாகும்.

முளைக் கீரைச் சாற்றில் முந்திரிப் பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் அடிக்கடி தடவிவந்தால், முகப்பரு, தேமல் போன்றவை மறைந்து முகப் பொலிவு ஏற்படும்.

சொறி, சிரங்கு, படை போன்ற தோல் நோய்கள் ஏற்பட்டவர்கள் முளைக்கீரையை சாப்பிடுவதால் சிறப்பாக குணமடையும். மேலும் தோலில் ஏற்படும் வறட்சி தன்மையை ஈரப்பதத்தையும், பளபளப்பான தன்மையையும் தருகிறது.

முளைக்கீரைச் சாற்றில் உளுந்தை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் நீர்க்கடுப்பு மறையும்.

எனவே இதுபோன்ற நல்ல மருத்துவத் தன்மையுடைய கீரைவகைகளை நாள்தோறும் உணவில் சேர்த்து உண்டு. நாம் நோயற்ற வாழ்வு வாழ்வோம்மாக…!

எதையும் வரும் முன் காப்போம்…!

நல்ல (உணவு) மருந்து…! நம்ம நாட்டு (உணவு) மருந்து…!

தொகுப்பு:- சங்கரமூர்த்தி…. 7373141110