இ-பாஸ் கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, 

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இதன்படி இந்தியாவில், மஹாராஷ்டிரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று கணிசமான அளவில் குறைந்து வந்த நிலையில், மீண்டும் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. 

இதனிடையே பொதுமக்கள், கொரோனா குறித்து பயமில்லாமல் முக கவசங்களை அணியாமல், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் செயல்படுவதாகவும், இன்னும் சில நாட்களுக்கு கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

மேலும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இனி இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், வணிக ரீதியான பயணமாக 3 நாள்களுக்கும் குறைவாக தமிழகம் வருவோருக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

செய்தி ரசூல்

தமிழ்மலர் மின்னிதழ்