மெட்ரோ ரயில் சேவைகளை 5 நிமிட இடைவெளியில் இயக்க முடிவு!

இன்று முதல் வார நாட்களில் பீக் ஹவர் என அழைக்கப்படும் உச்ச நேரங்களில் கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகளின் கோரிக்கையை கருத்தில் கொண்டு வார நாட்களில் அதாவது திங்கள் முதல் சனி வரை உச்ச நேரங்களில் இயக்கப்பட்டு வரும் சென்னை மெட்ரோ ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. 7 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகளை 5 நிமிட இடைவெளியில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் 5 நிமிடங்களுக்கு ஒரு முறையும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

இரவு 10 மணி முதல் 11 மணி வரை 28 நிமிடங்களுக்கு பதிலாக 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ சேவை வழங்கப்பட உள்ளது. ஞாயிற்றுக்கிழமை, அரசு பொது விடுமுறை நாட்களில் நாள் முழுவதும் பீக் ஹவர் இன்றி 20 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். பயணிகள் அதற்கேற்ப தங்கள் பயணத்தை திட்டுமிட்டுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்