சசிகலாவுக்கு பிரேமலதா விஜயகாந்த் ஆதரவு!

ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது

இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியது, “அதிமுக தாமதிக்காமல் கூட்டணி முடிவு குறித்து பேச வேண்டும். ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு. சசிகலாவை ஆதரிப்பதை அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாடாக யாரும் பார்க்கக் கூடாது” என்று அவர் கூறியுள்ளார்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்