விஷேச நாட்களின் போது சுற்றுலா பயணிகளின் வருகை

பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு தொடர் விடுமுறையையொட்டி 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அரசு விடுமுறை மற்றும் முக்கிய விஷேச நாட்களின் போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். பள்ளி விடுமுறை நிறைவடைந்ததும், கடந்த சில நாட்களாக ஆழியாருக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது.

இந்நிலையில், கடந்த 11ம் தேதி சரஸ்வதி பூஜை, நேற்று முன்தினம் விஜயதசமி நேற்று ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை நாள் என்பதால் ஆழியாருக்கு வந்த சுற்றுலா பயணிகள் அதிகமாக இருந்தது. ஆழியார் அணை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கார், வேன், பஸ் ஆகிய வாகனங்களில் அதிகளவில் வந்தனர்.

அவ்வப்போது சாரலுடன் மழை பெய்தாலும், வெயிலின் தாக்கம் குறைவாகவும் இருப்பதால், அங்கு வந்த சுற்றுலா பயணிகள் அணையில் ரம்மியமாக உள்ள தண்ணீரின் அழகை கண்டு ரசித்தனர். கூட்டம் சற்று அதிகமாக இருந்ததால், போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடந்த 3 நாட்களில் ஆழியார் அணைக்கு சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்ததாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply