கவிஞர் வைரமுத்து பதிவு

புயல் வீசத் தொடங்கி விட்டால் ஜன்னல் தன் வாயை மூடிக்கொள்ள வேண்டும் – கவிஞர் வைரமுத்து பதிவு!

இளையராஜா விஷயத்தில் தன்னை கடுமையாக விமர்சித்த கங்கை அமரனுக்கு வைரமுத்து சூசகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து, அண்மையில் இசை பெரிதா பாடல் பெரிதா என்று ஒப்பிடும் வகையில் பேசியிருந்தார். சில நேரங்களில் இசையை விட மொழி பெரிதாக இருக்கும் என்று அப்போது வைரமுத்து பேசியிருந்தார்.

வைரமுத்து இளையராஜாவைத் தான் இப்படி தாக்கிப் பேசி இருப்பதாக சர்ச்சை எழுந்தது. வைரமுத்து மற்றும் இளையராஜாவுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பரஸ்பரம் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் எழுந்தன.

இந்தநிலையில் இந்த விவகாரத்தில் இளையராஜாவின் தம்பியும் பிரபல இசையமைப்பாளருமான கங்கை அமரனும் வைரமுத்துவுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

“இளையராஜா பற்றி வைரமுத்து இனிமேல் பேசினால் நடப்பதே வேறு” என்று கங்கை அமரன் வைரமுத்துவிற்கு எதிராக வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

கங்கை அமரனின் இந்த விமர்சனத்திற்கு வைரமுத்து பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில் தான் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் இன்று பரபரப்பு கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

‘குயில் கூவத் தொடங்கிவிட்டால் காடு தன் உரையாடலை நிறுத்திக்கொள்ள வேண்டும். புயல் வீசத் தொடங்கிவிட்டால் ஜன்னல் தன் வாயை மூடிக்கொள்ள வேண்டும்.

வெள்ளம் படையெடுக்கத் தொடங்கிவிட்டால் நாணல் நதிக்கரையில் தலைசாய்த்துக் கொள்ள வேண்டும்.

மக்கள் தனக்காகப் பேசத் தொடங்கிவிட்டால் கவிஞன் தன் குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது’ என்று வைரமுத்து தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

வைரமுத்துவின் இந்தபதிவு திரைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.