எலான் மஸ்க்கின் இந்திய வருகை திடீர் தள்ளிவைப்பு!

உலகின் மிகப் பெரிய எலெக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைவர் எலான் மஸ்க் இந்தியா வரவிருந்த நிலையில், அவரின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய எலெக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, உலகளவில் தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இதன் ஒருபடியாகப் பல வருடப் போராட்டத்திற்குப் பின்பு இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பதற்கான சூழ்நிலை உருவாக்கியுள்ளது.

மின்சார வாகன உற்பத்தியில் உலகின் வேகமாக வளர்ந்து வரும் சந்தையான இந்தியாவில் நுழைய டெஸ்லா நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவிற்கு ஏப். 21, 22 ஆகிய தேதிகளில் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.

எலான் மஸ்க்-ன் இந்த இந்திய பயணத்தின் போது, பிரதமர் மோடியைச் சந்தித்து, இந்தியாவில் டெஸ்லா கார் தொழிற்சாலை அமைப்பது குறித்தும், ஸ்டார்லிங்க் சேவை அறிமுகம் செய்வது குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் எலான் மஸ்க்கின் பயணம் தள்ளிப் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது;

“துரதிர்ஷ்டவசமாக, டெஸ்லா நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக எனது இந்திய பயணம் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்திய பயணத்தை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.