தோழி மகளிர் விடுதியில் உலக வங்கி குழுவினர் ஆய்வு

 உலக வங்கி நிதி உதவியுடன் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்க, தோழி மகளிர் விடுதி தாம்பரம் சானடோரியம், ஜட்ஜ் காலனி பகுதியில் உள்ள சமூக நல மறுவாழ்வு இல்லம் அருகே கட்டி முடிக்கப்பட்டு, சமீபத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.

இங்கு, 400க்கும் மேற்பட்ட பெண்கள் தங்க வசதிகள் செய்யப் பட்டுள்ளது. இந்த தோழி மகளிர் விடுதியில் தற்போது 60க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி, பணிக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த தோழி மகளிர் விடுதியில் உலக வங்கி குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்கு வந்த உலக வங்கி குழுவினரை தமிழ்நாடு அரசு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா ஆகியோர் வரவேற்றனர்.

தோழி மகளிர் விடுதி செயல்படும் விதம், அங்கு அமைக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து உலக வங்கி குழுவினர் ஆய்வு செய்து, அங்கு தங்கியிருந்த மகளிரிடம் விடுதியின் வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.