பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு தராவிட்டால் அமைதியின்மை உருவாகும்: உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு கருத்து!!

தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இதை விசாரித்த நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் அமர்வு, பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஒன்றிய அரசு ஆதரவு தெரிவித்தாலும், ஒவ்வொரு பதவியிலும் எவ்வளவு பிரதிநிதித்துவம் உள்ளது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. அதனால், அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு உள்ள பிரதிநிதித்துவம் தொடர்பான புள்ளி விவரங்கள் என்னென்ன? அந்த பட்டியல் எதனை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது என்பதற்கான முழு விவரங்களையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்,’ என ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது.

அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘ஒன்றிய அரசின் 75 அமைச்சகங்கள், துறைகளில்  மொத்தம் 27 லட்சத்து 55 ஆயிரத்து 430 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில், 4 லட்சத்து 79 ஆயிரத்து 301 பேர் தாழ்த்தப்பட்டவர்கள், 2 லட்சத்து 14 ஆயிரத்து 738 பழங்குடியினர், இதர பிற்பட்டோர் 4 லட்சத்து 57 ஆயிரத்து 148 பேர் உள்ளனர். அரசியல் அமைப்பு சட்டத்தின்படியும் நீதிமன்றம் வகுத்து கொடுத்த விதிகளின் அடிப்படையிலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்காவிட்டால் ஊழியர்களிடையே அமைதியின்மை உருவாகி, ஏராளமானோர் வழக்கு தொடரும் நிலை ஏற்படும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் வேலூர்.