மீண்டும் விமான சேவை சவூதி அரேபியா அறிவிப்பு!

சவூதி அரேபியா அதன் எல்லைகளை மீண்டும் திறப்பதாக அறிவித்துள்ளது. புதிய வகை கொரோனா கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த இரண்டு வாரமாக சவூதி அரேபியா வெளிநாட்டு விமானச் சேவைகளை நிறுத்தியிருந்தது. அந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாக சவூதி உள்துறை அமைச்சு கூறியது. இருப்பினும் பிரிட்டன், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து சவூதி அரேபியா செல்வோர் 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

புதிய வகை கொரோனா கிருமி அதிகம் பரவியுள்ள நாடுகளிலிருந்து செல்பவர்களுக்கும் அது பொருந்தும். ஓமான், குவைத் ஆகிய அரபு நாடுகளும் தற்போது அவற்றின் எல்லைகளை மீண்டும் திறந்துள்ளன. COVID-19 நோய்த்தொற்றால் அரபு நாடுகளில் அதிகமாகப் பாதிக்கப்பட்டது சவூதி அரேபியா.

அங்கு 363,000 பேருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 6,200 பேர் இறந்துள்ளனர். இருப்பினும் அங்கு குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.