கல்லூரிகளை மேம்படுத்த காமராஜர் பெயரில் ரூ.1,000 கோடியில் திட்டம் அமைச்சர் அறிவிப்பு!!

சட்டசபையில் தமிழக பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 3 நாட்களாக நடந்து வந்தது. எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் நேற்று பதிலுரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் கடன் அளவு அதிகமாகி விட்டது. வருவாய் குறைந்து விட்டது. நாங்கள் தாக்கல் செய்த பட்ஜெட்டை பத்திரிகைகள் வரவேற்றுள்ளன. எதிர்காலத்தை மனதில் வைத்துள்ள பட்ஜெட் என்று ‘தினத்தந்தி’ பாராட்டிஇருக்கிறது. பட்ஜெட்டில் அனைத்து திட்டங்களிலும் ஏழைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இருளர்கள், பழங்குடியினருக்கு வீடுகள் கட்ட ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. முதியோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அவர்கள் தனியாக வசிக்கிறார்கள். அவர்களுக்காக திட்டங்கள் கொண்டு வரப்படும்.

நாங்கள் கொள்கை அடிப்படையில் ஆட்சி செய்கிறோம். நாங்கள் அரசியல் லட்சியவாதிகள். மாநில வளர்ச்சிக்கு பெரிய அளவில் முதலீடு தேவைப்படுகிறது. நிதியை பொறுத்தவரை எங்களுக்கு சில சவால்கள் உள்ளன. ஜி.எஸ்.டி. வந்த பின் தமிழ்நாட்டின் நிதியை சரி செய்வது கடினமாக இருக்கிறது. எங்கள் கையில் விலங்கு போட்டது போல் கஷ்டப்பட்டு வருகிறோம். அங்கிருந்து வரும் பணம் நிறுத்தப்பட்டுள்ளது. அப்படியே கொடுக்கப்படும் நிதியும் அவர்களின் திட்டங்களுக்கு மட்டுமே கொடுக்கிறார்கள்.

அடுத்தடுத்து நிதி குழுக்கள் நிதி ஒதுக்கீடு தொடர்பான கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டே வருகிறது. நமக்கு கொடுத்தால் கொடுக்கட்டும். இல்லையென்றால் நாம் சமாளித்துகொள்வோம். நம்மிடம் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதனால் நமக்கு எப்படியும் நிதி வந்துவிடும்.

ஆனால் இதற்கு மேல் பல்வேறு கடினமான பிரச்சினைகள் நமக்கு உள்ளது. முதல் பிரச்சினை, நாம் எப்போதெல்லாம் சட்டம் கொண்டு வருகிறோமோ, மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாம் எப்போதெல்லாம் முடிவுகளை எடுக்கிறோமோ, மக்கள் தேர்வு செய்த கொள்கைக்கு ஏற்றபடி எப்போதெல்லாம் நாம் சட்டங்களை ஏற்றுகிறோமோ அப்போதெல்லாம் அதை கவர்னர், ஜனாதிபதி ஏற்பதில்லை. 19 சட்ட மசோதாக்கள் இதுவரை நிலுவையில் உள்ளன. இதனால் அரசாணை வெளியிட முடியவில்லை.

இது எப்படி ஜனநாயகமாகும்? அவர்கள் (மத்திய அரசு) எதையும் சரியாக செய்வது இல்லை. நல்லது செய்தால் தடுக்கிறார்கள். சட்டத்தை இயற்ற முடியாது என்றால் ஏன் சட்டமன்றம். இரண்டாவது விஷயம், நான் கடந்த10 மாதங்களில் சுமார் 3 ஆயிரம் கோப்புகளை ஆராய்ந்து இருப்பேன். அதில் தெளிவாக தெரிகிறது. சட்டத்துறையின் கடமை என்ன, ஆட்சி துறையின் கடமை என்ன என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான வேறுபாடு அப்படியே அழிக்கப்பட்டு உள்ளது. அதிகாரிகள் கோர்ட்டுக்கு ஏறி இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்ய வேண்டும்.

சொந்த நிதியை ஒழுங்காக கையாளாத மாநிலங்கள்தான் நிதி இழப்பை சந்திக்கிறது. அந்த வகையில் அ.தி.மு.க ஆட்சியில் மிக மோசமாக நிதி நிலைமை ஆக்கப்பட்டுள்ளது. பீகார், உத்தரபிரதேசத்தை ஒப்பிட்டு பார்த்து சிறப்பாக இருக்கிறோம் என்பது போதாது. தென் கிழக்கு ஆசிய நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும் வகையில் நம்முடைய செயல்பாடு இருக்க வேண்டும்.

தமிழ் நாட்டின் பொருளாதார ஆலோசனைக்கான சிறப்பு நிபுணர்கள் குழுவினர் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். காலவரையறை எதுவும் இல்லாமல் அவ்வப்போது ஆலோசனைகளை வழங்குகிறார்கள். இதற்காக ஒரு ரூபாய் கூட அவர்கள் பெற்றதில்லை. நிதித்துறையில் ஒற்றை சாளர முறையில் பயனாளிகளுக்கு சலுகைகள் சென்றடைய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இதற்காக புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும்.

பெருந்தலைவர் காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டு திட்டம் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். இதன்மூலம் கல்லூரி கட்டிடங்கள் அதிக அளவில் கட்டப்பட்டு, தமிழகம் முழுவதும் கல்லூரிகள் மேம்படுத்தப்படும். இதற்கு காமராஜர் பெயரை சூட்ட முதல்-அமைச்சர் கேட்டுக்கொண்டார். ரூ.40 கோடியில் 6 மாடிகளுடன் நவீன மாணவர் விடுதி சென்னையில் கட்டப்படும்.

கோவை மெட்ரோ ரெயிலுக்கு விரிவான திட்ட அறிக்கை முடிவாகி விட்டது. பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் நிதி பெறுவதற்கு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மே மாதத்திற்குள் அறிக்கையை எதிர்பார்க்கிறோம்.

சென்னை விமான நிலையம் முதல் கேளம்பாக்கம் வரையிலான பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசின் பரிசீலனையில் இருக்கிறது. அத்திக்கடவு- அவினாசி திட்டம் வரும் ஜூன் மாதத்தில் முழுமையாக நிறைவடையும்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.