போர் தளவாட உதவிகளை உக்ரைனுக்கு வழங்குவதாக அறிவித்தார் அதிபர் ஜோ பைடன்!

அமெரிக்காவிடம் உதவி கேட்டு சில மணி நேரங்களில் கூடுதலாக 800 மில்லியன் டாலர் அளவிற்கு உக்ரைனுக்கு போர் தளவாட உதவிகளை அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.உக்ரைன் மீது 22-வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் நேற்று அமெரிக்கா நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி காணொலி வாயிலாக உரையாற்றினார்.

அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீதான தாக்குதலுக்கு பிறகான மோசமான போரை உக்ரைன் சந்தித்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். 8 ஆண்டுகளாக ரஷ்யாவின் ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்டுவருவதாக கூறிய ஜெலன்ஸ்கி விட்டு கொடுப்பது குறித்து யோசிக்கவே இல்லை என்கிறார்.  உயிரிழப்பை தடுக்காவிட்டால் வாழ்வதிலேயே அர்த்தமில்லை என்று தோன்றுகிறது என உருக்கமாக பேசினார்.

இதுவரை உதவிய அமெரிக்காவிற்கு நன்றி என கூறிய ஜெலன்ஸ்கி, இனியும் உதவி தேவை என்றும் கேட்டுக்கொண்டார். உக்ரைன் அதிபர் உதவி கேட்ட சில மணி நேரங்களில் கூடுதலாக 800 மில்லியன் டாலர் அளவிற்கு போர் தளவாடங்களை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அதன்படி 9 ஆயிரம் விமான தடுப்பு பீரங்கிகள், 7 ஆயிரம் துப்பாக்கிகள், குண்டு எரியும் லாஞ்சர்கள் மற்றும் ட்ரோன்கள் வழங்கப்படும் என்று ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்த அறிவிப்பின் மூலம் ரஷ்யா உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வருமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.