திரைப் பிரபலங்கள் வெளியிட்டுள்ள ” சா “படத்தின் முதல் பார்வை!

சென்னை: சாதீயக் கொடுமைகளின் கோரமுகமாய் விளங்கும் ‘ஆணவக் கொலை’யை, மையக் கருவாய்க் கொண்டு ‘சா’ எனும் ஒற்றை எழுத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ஒன்று தயாராகி வருகிறது.

Wafi Group Middle East நிறுவனத்தின் சார்பில் கேராளாவை சேர்ந்த சஞ்ஜீவ் மாதவன் தயாரித்துள்ள இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் எஸ்.இ.சபரி. இவர், இயக்குநர் பேரரசு, நடன இயக்குனர் அஜய் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்துக்கு இசையமைத்துள்ளார் ஆஸ்திரேலியாவில் வாழும் ஈழத்து இசையமைப்பாளர் அருண்குமாரசுவாமி.

இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் எழுதியுள்ளார் கவிஞர் அஸ்மின்.

இப்படத்தின் முதல் பார்வை புத்தாண்டு தினத்தில் இந்தியா,இலங்கை, ஆஸ்திரேலியா மூன்று நாடுகளில் வெளியிட பட்டுள்ளது.

இலங்கையில், இப்படத்தின் முதல்பார்வையினை பாடலாசிரியர் அஸ்மின் வழங்க உலக அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் வெளியிட்டார்.

ஆஸ்திரேலியாவில், இசைமைப்பாளர் அருண்குமாரசுவாமி வழங்கி வைக்க விஜய்சேதுபதியின் “சேதுபதி”,”சிந்துபாத்”,”மாமனிதன்” போன்ற படங்களை தயாரித்த வான்சன் மூவி நிறுவனர், தயாரிப்பாளர் சான் சுதர்சன் வெளியிட்டார்.

தமது சமூக வலைத்தளங்களின் ஊடாக இயக்குனர்கள் பேரரசு, சரவண சக்தி, மக்கள் தொடர்பாளர் விஜய் முரளி,நடன இயக்குனர்களான அஜய் ராஜ், தீனா மாஸ்டர், நடிகர்களான லொல்லு சபா ஜீவா, ரிச்சர்ட் ரிசி, காதல் சுகுமார், அபி சரவணன்,சம்பத்ராம்,குரு ஜீவா,கூல் சுரேஸ்,எடிட்டர் டான்பாஸ்கோ, தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் ராஜ், இசை அமைப்பாளர் அஸ்வின்,நடிகை நிரஞ்சனி சண்முகராஜா, நடிகை திவ்யா ஆகியோர் வெளியிட்டனர்.

அம்மா, அப்பா, வீடு, உறவு, சாதி, மதங்களை தாண்டி காதலித்து மணம் முடிக்கும் இளம் தம்பதிகளை ஆணவக்கொலை செய்யும் சம்பவங்களை வேறொரு கோணத்தில் சொல்லும் இப்படத்தின் உச்சக்கட்ட காட்சிகள் கோவை, மேட்டுப்பாளையம், கர்நாடகாவில் உள்ள மடிக்கேரி பகுதிகளில் உள்ள அழகிய இடங்களில் படமாக்கப்பட்டு வருகின்றன.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்,