அமெரிக்காவுக்கு ராக்கெட் என்ஜின்கள் வழங்குவதை நிறுத்த ரஷியா முடிவு!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் அந்த நாடு மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடும் ஆத்திரத்தில் உள்ளன. இந்த போரை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி வரும் அந்த நாடுகள், இதை ஏற்காத ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.

அந்தவகையில் ரஷியா மீதும் அதன் அதிபர் விளாடிமிர் புதின் மீதும் அடுத்தடுத்து பொருளாதார தடைகளை விதித்து வரும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், சர்வதேச பரிமாற்றங்களுக்கான ‘ஸ்விப்ட்’ கூட்டமைப்பில் இருந்து ரஷிய வங்கிகளையும் நீக்கி உள்ளன.
இவ்வாறு தொடர்ந்து பொருளாதார தடைகளையும், தண்டனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த வரிசையில் மிக முக்கியமாக, அமெரிக்காவுக்கு ராக்கெட் என்ஜின் ஏற்றுமதியை நிறுத்த ரஷியா முடிவு செய்துள்ளது. இந்த தகவலை ரஷியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் டிமிட்ரி ரோகோசின் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து டி.வி. பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், ‘இன்று, எனர்கோமாஷ் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி சங்கத்தின் உற்பத்தியை (ராக்கெட் என்ஜின்கள்) அமெரிக்காவுக்கு வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளோம். 1990-களின் நடுப்பகுதியில் இருந்து, இந்த வினியோகம் சுறுசுறுப்பாக இருந்ததை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். முதலில் இது ஆர்.டி.180 எந்திரங்கள் ஆகும்’ என்று தெரிவித்தார்.
இதைப்போல அமெரிக்காவுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 24 என்ஜின்களின் பராமரிப்பு பணிகளையும் ரஷியா நிறுத்துவதாக கூறிய டிமிட்ரி ரோகோசின், ரஷியா மீது மேற்கு நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளின் அடிப்படையில், ரஷியாவின் ராக்கெட் மற்றும் விண்வெளித் திட்டம் சரிசெய்யப்படும் என்றும் கூறினார்.
ரோஸ்கோஸ்மோஸ் மற்றும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்தின் நலன்களுக்காக இரட்டை பயன்பாட்டு செயற்கைக்கோள்களை உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் டிமிட்ரி ரோகோசின் தெரிவித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.