எய்ம்ஸ் செவிலியர் யூனியன் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

புதுடெல்லி: ஆறாவது மத்திய ஊதியக் கமிஷன் தொடர்பாகவும், ஒப்பந்தப் பணி நியமனம் தொடர்பாகவும் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது எய்ம்ஸ் செவிலியர் யூனியன்.

இந்த வேலைநிறுத்தம் டிசம்பர் 14ம் தேதி முதல் துவங்கியுள்ளது. போராட்டத்தைக் கைவிட்டு, செவிலியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டுமென எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா கோரிக்கை விடுத்தும், அது நிராகரிக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் நிர்வாகம் தரப்பில், தொற்றுநோய் காலத்தில் மேற்கொள்ளப்படும் இந்த வேலைநிறுத்தம் ‘பொருத்தமற்றது & துரதிருஷ்டவசமானது’ என்று கூறப்பட்டாலும், சுமார் 5000 செவிலியர்கள் வரை இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தை நடத்துவதன் மூலம், செவிலியர்களுக்கென்று இருக்கும் ஒரு கண்ணியத்தை குறைத்துக்கொள்ளக் கூடாது’ என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் குலேரியா.

செவிலியர் யூனியன் முன்வைக்கும் 23 நிபந்தனைகளில், ஏறக்குறைய மிகப் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

K.N ஆரிப் செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்.