இனி வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி வகுப்பு நடத்தபடும்

வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு ஆங்கிலத்தில் உரையாடுவது பெரும் சவாலாக உள்ளதால் வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து  ஆங்கிலப் பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படியும், இளையர்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான தி.மு.க தேர்தல் அறிக்கையின் அடிப்படையிலும், திருச்சி இளையோருக்காக இணைய வழி வேலை வாய்ப்பு முகாம் “திசைகாட்டும் திருச்சி” என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள 15,231 இளையர்கள் பதிவு செய்துள்ளனர். கணினி தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்கு மட்டுமே 4,159 பேர் பதிவு செய்துள்ளனர். உற்பத்தி தொடர்பான வேலைகளுக்கு  2826 பேரும், வங்கி மற்றும் விற்பனை சந்தைபடுத்துதல்  துறைகளுக்கு 1956 பேரும், விண்ணப்பித்துள்ளனர், மருத்துவத்துறை சார்ந்த பணிகளுக்கு 525 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.