நியூட்ரினோ,மீத்தேன், எட்டு வழிச்சாலை எதிர்ப்பு போராட்ட வழக்குகள் வாபஸ் – சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மீத்தேன், நியூட்ரினோ எட்டுவழிச் சாலை எதிர்ப்பு போராட்டத்தின் போது போட்டப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை

சட்டசபையில் முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணா, அண்ணாவின் தொடர்ச்சி கலைஞர், கலைஞரின் தொடர்ச்சி நான். அண்ணாவின் அரசியல் வாரிசு, கலைஞரின் கொள்கை வாரிசு நான். என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி.

கொளத்தூர் தொகுதியில் வாக்களித்த வாக்காளர்களுக்கும், தோழமை கட்சிகளுக்கும் நன்றி

பொறுத்தார் பூமியாழ்வார் என்பது பழமொழி, நாங்கள் பத்தாண்டுகள் பொறுத்திருந்து ஆட்சிக்கு வந்துள்ளோம், கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம், துளி அளவும் சந்தேகம் வேண்டாம்.

இரு தினங்களாக தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் விவாதத்தில் பங்கேற்றிருக்கிறார்கள், அவர்களின் கருத்தை நான் அறிவுரையாக எடுத்துக் கொள்கிறேன்.

5 ஆண்டு கால ஆட்சியில் செயல்படுத்தவுள்ளதை கவர்னர் உரையில் சொல்லி விட முடியாது; கவர்னர் உரை முன்னோட்டம் தான்

தடுப்பூசி இல்லை, ஆக்சிஜன் இல்லை என்ற சூழலில் தான் ஆட்சிக்கு வந்தோம்; தற்போது இல்லை என்ற சூழலே இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம்
ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது மக்களுக்காக குரல் கொடுத்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.

மீத்தேன், நியூட்ரினோ எட்டுவழிச் சாலை எதிர்ப்பு போராட்டத்தின் போது போட்டப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ் மலர் மின்னிதழ் செய்தியாளர்
MG தமீம் அன்சாரி.