யூரோ கோப்பை கால்பந்து: 3-0 என துருக்கியை வீழ்த்தி இத்தாலி அணி அதிரடி வெற்றி

யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தி இத்தாலி அணி அதிரடி வெற்றிபெற்றது. ரோம்,

ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. யூரோ கோப்பை போட்டியில் மொத்தம் 24 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இத்தாலியின் ரோம் நகரில் நேற்று தொடங்கிய முதல் லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள துருக்கி, இத்தாலி அணிகள் மோதின.
ரோமில் உள்ள ஒலிம்பிகோ ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில் இடைவேளை வரை இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இடைவேளைக்குப் பிறகு துருக்கி அணியின் கட்டுக்கோப்பு இழக்கப்பட்டது. துருக்கி தடுப்பணைக்கு நெருக்கடி அதிகரித்ததில் இத்தாலி வீரர் பெரார்டியின் ஷாட் ஒன்று வேகமாக உள்ளே வர துருக்கி வீரர் மெரி டெமிரால் அதனை தன் நெஞ்சால் தடுக்க முயற்சிக்க பந்து கோலுக்குள் சென்றது, இதன்மூலம் செல்ப் கோல், அல்லது ஓன் கோல் ஆக இத்தாலி அணிக்கு முதல் கோல் கிடைத்தது.

66வது நிமிடத்தில் சிரோ இம்மொபைலும் 79வது நிமிடத்தில் லாரென்சோ இன்சிக்னியும் கோல்களை அடிக்க இத்தாலி முதல் முறையாக யூரோவில் 3-0 என்று வெற்றி பெற்றது. துருக்கி அணியால் பதிலுக்கு ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில், இத்தாலி அணி 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 27 போட்டிகள் தோற்காத நிலையில் வந்த இத்தாலி அணி அந்தச் சாதனையை தக்க வைத்தது.

இன்றைய போட்டிகள்:

வேல்ஸ்-சுவிட்சர்லாந்து (ஏ பிரிவு)

இடம்: பாகு, இந்திய நேரம்: இரவு 6.30 மணி

டென்மார்க்-பின்லாந்து (பி பிரிவு)

இடம்: கோபன்ஹேகன், இந்திய நேரம்: இரவு 9.30 மணி
தமிழ் மலர் மின்னிதழ் செய்தியாளர்.. தமீம் அன்சாரி