கொரோனா தொற்றால் பாதித்த பகுதிகளில் சாலைகள் அடைப்பு

கொரோனா பாதிப்பு

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டி பஞ்சாயத்து பூபாலசமுத்திரம் கிராமத்தில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் சிலர் இறந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நெல்லை-தென்காசி நெடுஞ்சாலையில் இருந்து பூபாலசமுத்திரம் ஊர் வழியாக மேலகிருஷ்ணபேரி செல்லும் தார் சாலை கம்பு கட்டி அடைக்கப்பட்டது.

மேலும் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் பூபாலசமுத்திரம், நவநீத கிருஷ்ணபுரம், இலங்காபுரிபட்டணம் ஆகிய பகுதிகளில் அனைத்து தெருக்களிலும் கிருமி நாசினி தெளித்தும், பிளிச்சிங் பவுடர் தூவியும் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலைகள் அடைப்பு

இதேபோல் கீழப்பாவூர் நகர பஞ்சாயத்து சாலைபுதூரில் உள்ள சிலருக்கு நோய்த்தொற்று இருப்பதை தொடர்ந்து வெளி ஆட்கள் யாரையும் ஊருக்குள் அனுமதிக்காமல் இருக்க அங்குள்ள 2 சாலைகளும் கம்பு கட்டியும், முள்செடிகளை கொண்டும் முற்றிலும் அடைக்கப்பட்டன.- செய்தியாளர் செய்யது அலி