பெரு நாட்டின் ஒஷிகஜி பாலைவனத்தில் புதைப்படிம ஆராய்ச்சியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பாலைவனம் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பெருங்கடலாக இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.
இதற்கிடையில், அந்த பாலைவனத்தின் தெற்கு பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆராய்வுப்பணிகளை மேற்கொண்டபோது மிகப்பெரிய மண்டை ஓடு புதைந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
இதனை தொடர்ந்து அந்த மண்டை ஓட்டை மண்ணில் இருந்து எடுத்த ஆராய்ச்சியாளர்கள் அந்த மண்டை ஓடு எந்த விலங்கை சேர்ந்தது என்ற ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், ஆய்வின் போது பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடு பலிலோசாரஸ் என்ற திமிங்கலத்திற்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்த மண்டை ஓடு சுமார் 36 மில்லியன் அதாவது சுமார் 360 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதும் தெரியவந்துள்ளது.
பெரு நாடு அமைந்துள்ள பகுதி பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பெருங்கடல் சூழ்ந்த பகுதியாக இருந்ததால் அந்த கடல்பகுதியில் இந்த பலிலோசாரஸ் திமிங்கலம் வாழ்ந்துவந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பலிலோசாரஸ் திமிங்கலத்தின் மண்டை ஓட்டை ஆராய்ச்சியாளர்கள் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைத்துள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.

About The Author