கொடநாடு கொலை வழக்கு விசாரணை ஆகஸ்ட் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டம் கொடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் இந்த எஸ்டேட்டிற்குள் நுழைந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின்னர், ஜெயலலிதா மற்றும் சசிகலா தங்கும் அறைகளில் இருந்து பல்வேறு பொருட்களை கொள்ளையடித்து சென்றது. இதுதொடர்பாக சோலூர்மட்டம் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர். 5 ஆண்டுகளாக இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகள் சயான், ஜித்தின் ஜாய் ஆகியோர் ஆஜராகினர். அரசு தரப்பில் வக்கீல் ஷாஜகான், கனகராஜ் ஆஜராகினர். சிபிசிஐடி கூடுதல் எஸ்பி., முருகவேல் தலைமையில் போலீசார் ஆஜராகினர். அப்போது, நீதிபதி அப்துல்காதர், இவ்வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

About The Author