தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பு சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 90 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். ஐதராபாத் நகரின் மாதப்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சீனிவாசராவ் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் காவல்துறையினர் ரோந்து சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்தனர்.

அவர்களிடம் இருந்த 90 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்த உயர்ரக மது பாட்டில்கள் மற்றும் செல்போன்களும் சிக்கியுள்ளன. சூதாட்டத்தில் ஈடுபட்ட வசந்தா, வந்தனா, சவுஜன்யா ஆகிய 3 பெண்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிடிபட்ட அனைவரும் நில தரகர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் வியாபாரிகள் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.

About The Author