ஐ.பி.எல்., ‘சரவெடி’ திருவிழா இன்று துவங்குகிறது…

மும்பை: ஐ.பி.எல்., தொடரின் துவக்க போட்டியில் இன்று (மார்ச் 26) சென்னை, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. சென்னை அணியின் கேப்டன் ரவிந்திர ஜடேஜா, ருதுராஜ், ராயுடு அடங்கிய ‘ஆர்’ கூட்டணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் 15வது ஐ.பி.எல்., தொடர்(மார்ச் 26-மே 29) நடக்க உள்ளது. சென்னை, மும்பை, கோல்கட்டா, குஜராத், லக்னோ உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் முதல் லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ சென்னை அணி, கோல்கட்டாவை சந்திக்கிறது. கடந்த முறை பைனலில் இவ்விரு அணிகளே மோதின.

அப்போது டுபிளசி(86 ரன்), மொயீன் அலி(37), ஷர்துல் தாகூர்(3 விக்.,) கைகொடுக்க, சென்னை கோப்பை வென்றது. இம்முறை நிலைமை தலைகீழாக உள்ளது. சமீபத்திய ‘மெகா’ வீரர்கள் ஏலத்திற்கு பின் அனைத்து அணிகளும் மாற்றம் கண்டுள்ளன. பெங்களூரு அணி கேப்டனாகிவிட்டார் டுபிளசி. டில்லிக்கு சென்று விட்டார் ஷர்துல். சென்னை அணியை 12 ஆண்டுகளாக வழிநடத்திய ‘தல’ தோனி சாதாரண வீரராக களமிறங்குகிறார்.

புதிய கேப்டனாக ‘ஆல்-ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜா அசத்த காத்திருக்கிறார். இவருக்கு துவக்க வீரர் ருதுராஜ், ராயுடு கைகொடுக்கலாம். இந்த மூவரின் பெயரும் ஆங்கில எழுத்தான ‘ஆர்’ல் துவங்குவது சிறப்பு. ‘விசா’ பிரச்னையில் சிக்கிய மொயீன் அலி இன்றைய போட்டியில் பங்கேற்க மாட்டார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.