அருண்நேரு இறுதிகட்ட பிரசாரத்தில் வாக்குறுதி

பூக்கள் உற்பத்தி அதிகமாக இருப்பதால் ரங்கத்தில் சென்ட் பேக்டரி அமைக்கப்படும் திமுக வேட்பாளர் அருண்நேரு இறுதிகட்ட பிரசாரத்தில் வாக்குறுதி

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு நேற்று இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். நேற்று காலை மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நம்பர் ஒன் டோல்கேட், வாளாடி, கூத்தூர், தாளக்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர் , நொச்சியம், அய்யம்பாளையம் ஆகிய பகுதிகளில் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து எம்எல்ஏக்கள் மண்ணச்சநல்லூர் கதிரவன், முசிறி தியாகராஜன், காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் கலை, மண்ணச்சநல்லூர், சமயபுரம் பேரூராட்சி தலைவர்கள் ஆகியோர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.சமயபுரம், மண்ணச்சநல்லூர் பகுதியில் திமுக வேட்பாளர் அருண்நேரு பேசியதாவது: இங்கு விளையும் நெல்லுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. எனவே மண்ணச்சநல்லூர் அரிசிக்கு புவிசார் குறியீடு கிடைக்கவும், அரிசி ஆலைகள் அதிகம் உள்ள பகுதி இது என்பதால் சப் ஸ்டேஷன் அதாவது கூடுதல் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன். மேலும் திருப்பைஞ்ஞீலீ , ஈச்சம்பட்டி, மூவராயன்பாளையம் கிராம பகுதியில் அதிகமாக விளையும் பூக்களை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் ரங்கம் பூமார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர்.

அவர்களின் நலன் கருத்தி மண்ணச்சநல்லூர், நொச்சியத்தில் இருந்து ரங்கத்திற்கு செல்ல பாலம் அமைக்கப்படும். மற்றும் பூக்கள் அதிகளவு உற்பத்தி செய்யப்படுவதால் மலர்களில் இருந்து தயாரிக்கப்படும் சென்ட் பேக்டரி அமைக்க ஏற்பாடு மேற்கொள்வேன்.

அதுமட்டுமின்றி நலிந்து போன கல்பட்டறை தொழிலுக்காக சீனாவில் இருந்து செயற்கை ஆபரண கற்கள் இறக்குமதியால் மண்ணச்சநல்லூர் பகுதியில் கல்பட்டறைக்கு ஈடாக கைத்தொழில் மூலம் வருவாய் கிடைத்திடும் வகையில் மாற்று ஏற்பாடு செய்திட நடவடிக்கை எடுப்பேன்.