திருவாலியில் திருவேடுபறி பிரம்மோற்சவம்

திருவாலியில் திருவேடுபறி பிரம்மோற்சவம்
24.3.2024 – ஞாயிறு

சீர்காழிக்கு அருகே திருவாலி திருநகரி என்று இரண்டு கோயில்கள் இருந்தாலும், ஒரே திவ்ய தேசமாகக் கருதப்படுகிறது. ஸ்ரீ கல்யாண ரங்கநாதப் பெருமாள் பிரம்மோற்சவம் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் பெருமாள் ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா நடக்கும். மூன்றாம் தேதி திங்கட்கிழமை சூர்ண உற்சவம் நடைபெறும். மாலை பெருமாளும் ஆழ்வாரும் மங்கலகிரியில் புறப்படுவார்கள். 24.3.2024 ஞாயிறு பிற்பகலில், திருவாலியில் (சீர்காழிக்கு அருகில் பூம்புகார் போகும் வழியில்) ஸ்ரீ கல்யாண ரங்கநாத பெருமாளுக்கு திருக்கல்யாண மகோற்சவம் நடைபெறும். அதற்குப் பிறகு வேதராஜபுரம் என்னும் இடத்தில் இரவு 12 மணிக்கு திருவேடுபறி உற்சவம் நடைபெறும். லட்சக்கணக்கான மக்கள் இந்த உற்சவத்துக்கு கூடுவார்கள். திருமங்கையாழ்வாருக்கு ஞானம் கிடைத்த உற்சவமாக இந்த உற்சவத்தைக் கருதுகிறார்கள். இதற்கு முன்னால் திருவாலி தேசத்தின் அரசராக இருந்தவர். திருவேடுபறி உற்சவத்தின் முடிவில் பெருமாளிடம் திருமந்திரம் உபதேசம் பெற்று ஆழ்வாராகி தம்முடைய பெரிய திருமொழியைத் தொடங்கிய நாள் இந்த நாள். 25.4.2024 தீர்த்தவாரி திருமஞ்சனம் சாற்றுமுறை நடந்து இந்த உற்சவம் பூர்த்தி ஆகிறது. இதே நாளில் ஸ்ரீ ரங்கத்தில் பங்குனி உத்திர வைபவம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். அன்று பெரிய பிராட்டி ஸ்ரீ ரங்கநாயகித் தாயாருக்கும் நம்பெருமாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் எனும் சேர்த்தி உற்சவம் நடைபெறும். இந்த நாளில்தான் ஸ்ரீ ராமானுஜர் சரணாகதி கத்யம் பாடி உலக மக்கள் நன்மை அடைய வேண்டும் என்பதற்காக
பெருமாளிடம் சரண் புகுந்தார்.