சிவன் கோயிலில் லிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு.

நாமக்கல் அருகே சிவன் கோயிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசய நிகழ்வு நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டியில் சிவகாமி அம்பாள் உடனுறை சிதம்பரேசுவரா் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு பிரதோஷம், சிவராத்திரி மற்றும் இதர விழாக் காலங்களில் ஏராளமான பக்தா்கள் வருகை புரிவா். ஒவ்வோா் ஆண்டும் மாசி மாதம் 27, 28, 29 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நேரடியாக கோயில் பிரகாரத்தில் உள்ள நந்தி மீதும், அடுத்து உள்பிரகாரத்தில் உள்ள சிறிய நந்தி மீதும், கருவறையில் உள்ள லிங்கத்தின் மீதும் விழும் அதிசய நிகழ்வு நடைபெறும்.

அதன்படி நிகழாண்டு திங்கள்கிழமை காலை 6.25 முதல் 6.30 வரையில் ஐந்து நிமிடம் சூரியஒளி சிவலிங்கம் மீது விழுந்தது. அதன்பிறகு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரண்டு வழிபாடு மேற்கொண்டனா்.