அமெரிக்காவில் ஆப்கானிஸ்தான் தூதரகம் மூடப்பட்டது..!

ஆப்கானிஸ்தானை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முழுவதுமாக தங்கள் வசமாக்கிய தலீபான்கள் அங்கு ஆட்சியில் இருந்த ஜனநாயக அரசை அகற்றிவிட்டு, புதிய அரசை அமைத்தனர். தலீபான்கள் தலைமையிலான இந்த புதிய அரசை உலக நாடுகள் எதுவும் இதுவரை முறைப்படி அங்கீகரிக்கவில்லை. 

இதனால் ஆப்கானிஸ்தானுக்கு சர்வதேச நாடுகளிடம் இருந்து கிடைக்கும் நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே போல் வெளிநாடுகளில் உள்ள ஆப்கானிஸ்தானின் சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் ஆப்கானிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது.
இதன்காரணமாக அமெரிக்காவில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் மற்றும் துணை தூதரகங்களில் நிதிபற்றாகுறை நிலவியது. அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் நிதிப்பற்றாகுறை உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்காவில் உள்ள தங்கள் தூதரகத்தை மூடப்போவதாக ஆப்கானிஸ்தானின் தலீபான்கள் அரசு கடந்த வாரம் அறிவித்தது.
அதன்படி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம், நியூயார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களில் உள்ள ஆப்கானிஸ்தான் துணை தூதரகங்கள் நேற்று மூடப்பட்டன.
தூதரகம் மற்றும் துணை தூதரகங்களின் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பு அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.