எரிக்கப்படுவதற்கு முன் கடும் தாக்குதல்: 8 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் ‘திடுக்” தகவல்!

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட எட்டு பேர் மீதும், எரிப்பதற்கு முன் கடும் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம், பிர்பும் மாவட்டத்தில் உள்ள பர்ஷல் கிராம பஞ்., துணைத் தலைவராக இருந்த திரிணமுல் காங்., கட்சியின் பாதுஷேக், 23ம் தேதி வெட்டிக் கொல்லப்பட்டார். இதையடுத்து, பர்ஷல் கிராமத்துக்கு அருகில் உள்ள போக்டுய் கிராமத்துக்கு, அன்று மாலையில் வந்த ஒரு கும்பல், அங்குள்ள வீடுகளுக்கு தீ வைத்தது. இதில், எட்டு பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இந்நிலையில், உயிர் இழந்த எட்டு பேரும், முன்னதாக கடுமையாக தாக்கப்பட்டிருப்பது, பிரேத பரிசோதனை அறிக்கை வாயிலாக தெரிய வந்துள்ளது. கிராமத்துக்குள் புகுந்த அந்த கும்பல், மூன்று பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட எட்டு பேரையும் சரமாரியாக தாக்கியுள்ளது. அவர்கள் வீட்டுக்குள் சென்று கதவை மூடியவுடன், அந்த வீட்டிற்கு தீ வைத்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.