உலகின் மிகப்பெரிய இந்து கோவிலைக் கட்ட நிலத்தை நன்கொடையாக அளித்த இஸ்லாமிய குடும்பம் ..!

உலகின் மிகப்பெரிய இந்து கோவில் கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை பாட்னாவை மையமாகக் கொண்ட மகாவீர் மந்திர் அறக்கட்டளையின் தலைவர் ஆச்சார்யா கிஷோர் குணால் செய்துவருகிறார்.
பீகார் மாநிலத்தின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள கைத்வாலியா பகுதியில் “விராட் ராமாயண் மந்திர்” கோவில் அமையவுள்ளது. இது 215 அடி உயரமுள்ள கம்போடியாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அங்கோர் வாட் வளாகத்தை விட உயரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் தற்போது பீகாரில் உள்ள ஒரு முஸ்லீம் குடும்பம் இந்த கோவிலை கட்டுவதற்காக ரூ.2.5 கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாக அளித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அறக்கட்டளையின் தலைவர் ஆச்சார்யா கிஷோர் குணால் கூறுகையில் ”  நிலத்தை நன்கொடையாக வழங்கிய இஷ்தியாக் அகமது கான் குவஹாத்தியில் உள்ள கிழக்கு சம்பாரனைச் சேர்ந்த தொழிலதிபர். 
இவர் இந்த கோவில் கட்டுவதற்காக தனது குடும்பத்திற்கு சொந்தமான ரூ.2.5 கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். இது சமூக நல்லிணக்கம் மற்றும் இரு சமூகங்களுக்கு இடையிலான சகோதரத்துவத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு ” என அவர் தெரிவித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.