தென்கொரியாவை திணறடிக்கும் கொரோனா..!! தினசரி பாதிப்பு 6 லட்சத்தை தாண்டியது!!

கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவை கொரோனா வைரஸ் திணறடித்து வருகிறது. ஒமைக்ரான் தாக்கத்தால் உருவான கொரோனாவின் புதிய அலை, அங்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. 
இந்நிலையில், தென்கொரியாவில் கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 6 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 
புதிதாக 6 லட்சத்து 21 ஆயிரத்து 328 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து, அங்கு மொத்த பாதிப்பு 82 லட்சத்து  50 ஆயிரத்து 592 ஆக அதிகரித்தது. அதே சமயம், கொரோனா உயிரிழப்பை பொறுத்த வரையில் ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் முன்னர் எப்போதும் இல்லாத வகையில், ஒரே நாளில் 293 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தனர். நேற்று இது கிட்டத்தட்ட பாதியாக குறைந்து 164 பேராக பதிவானநிலையில், இன்று 429 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 481 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.