மக்களவை, மாநிலங்களவை ஒரே நேரத்தில் செயல்படும்!!

கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நடைபெற்றது. கொரோனா விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டன. ஜனவரி 31ம் தேதி தொடங்கி பிப்ரவரி 11ம் தேதி வரை முதல் தொடர் நடைபெற்றது. மாநிலங்களவை காலை 10 மணி முதல் 3 மணி வரையிலும், மக்களவை 4 மணி முதல் 9 மணி வரையிலும் செயல்பட்டது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு வரும் 14ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 8ம் தேதி இத்தொடர் முடிகிறது. இது தொடர்பாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் நேற்று சந்தித்து, இருக்கைகள் ஒதுக்குவது குறித்து ஆலோசித்தனர்.
இதைத் தொடர்ந்து, 2வது தொடரில் மக்களவை,  மாநிலங்களவை ஒரே நேரத்தில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அவைகளும் வழக்கம் போல் காலை 11 மணிக்கு தொடங்கும். மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பயன்படுத்திய இருக்கைகளில் அமர்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.