பல நோய்களை விரட்டும் நிலவேம்பு ….

நிலவேம்பு கசாயம் என்பது ஒன்பது வகைகளான மூலிகைகள் மற்றும் உணவுப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் அருமருந்தாகும். நிலவேம்பு செடி வகையை சார்ந்தது. இதன் காய்கள் வெடிக்கும் தன்மை கொண்டது. விதைகள் சிறிய அளவில் மஞ்சள் நிறத்தில் இருக்கும். நிலவேம்பு பெரியாநங்கை, சிறியாநங்கை, மிளகாய் நங்கை, குருந்து, கொடிக்குருந்து போன்ற மாற்றுப் பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. நிலவேம்பு முழுவதும் மருத்துவப்பயன் கொண்டது. கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இதனால் நீர்க்கோவை, மயக்கம் போன்றவை குணமாகும், புத்தி தெளிவு உண்டாகும், மலமிளக்கும், தாதுக்களைப் பலப்படுத்தும். நிலவேம்பு இலைகள் காய்ச்சல் மற்றும் விட்டு, விட்டு வரும் காய்ச்சலைக் குறைக்கும், பசியை உண்டாக்கும். விட்டு, விட்டு வரும் காய்ச்சல் குணமாக நிலவேம்பு முழு தாவரத்தையும் சேகரித்து குடிநீர் செய்து 30 மிலி வீதம் காலை மாலை வேளைகளில் 3 நாட்கள் சாப்பிட்டால் பலன் தெரியும். தொடர் காய்ச்சலை கட்டுப்படுத்த சுண்டைக்காய் அளவு நிலவேம்பு இலை பசையை காலை மாலை வேளைகளில் காய்ச்சல் தீரும் வரை சாப்பிட்டு வரவேண்டும். நிலவேம்பு வேரில் இருந்து கஷாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் காலை மாலை வேளைகளில் தொடர்ந்து 2 வாரங்கள் வரை சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி பெறலாம். நிலவேம்பு இலைச்சாறு அரை டம்ளர் வீதம் இரண்டு வேளைகள் மூன்று நாள்கள் குடிக்க கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். 5 கிராம் அளவு நிலவேம்பு இலை தூளைக் காலையில் உட்கொள்ள வேண்டும். அல்லது 5 பெரியா நங்கை இலைகளுடன் 10 சீரகம் சேர்த்து  சாப்பிட வேண்டும். அல்லது வேரில் இருந்து கசாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் இரவில் மட்டும் 3 நாள்களுக்கு சாப்பிட்டு வர வயிற்றுப் புழுக்கள் வெளியேறும். நிலவேம்பு முழுத் தாவரத்தையும் உலர்த்தி பொடி செய்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். குளிக்கும்போது, தேவையான அளவு நீரில் குழைத்து பசையாக்கி உடலில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்துக் குளிக்க வண்டு கடி, சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.நிலவேம்பு இலையில் இருந்து கஷாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் காலையில் மட்டும் 2 வாரத்திற்கு குடித்து வர காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கிற்குப் பின்னர் ஏற்படும் அசதி தீரும். நிலவேம்பு செடியை வளர்த்தால் அங்கு பாம்புகள் வருவதில்லை.சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட உயர்நிலை ஆய்வுகளில் இருந்து நிலவேம்புச் செடிக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், டைபாய்டு எதிர்ப்பு சக்தியும் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. பசியைத் தூண்டும்:  பசியால் அவதிப்படுபவர்களை விட பசியின்றி அவதிப்படுவர்கள் அதிகம். வயிற்றில் உள்ள வாயுக்கள் மந்தமாகி பசியற்ற தன்மையை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் பசி என்பதே சிலருக்கு ஏற்படுவதில்லை. இவர்கள் நிலவேம்பை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனை காலையில் மட்டும் கசாயம் செய்து குடித்து வந்தால் பசி நன்கு உண்டாகும்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்