ஏவுகணை வீசி தாக்குதல் கதிர்வீச்சு கசிவு இல்லை!!!!

ஏவுகணை வீசி தாக்குதல் கதிர்வீச்சு கசிவு இல்லை
* ஜாபோரிஜியா அணு மின் நிலையம் மீது ரஷ்ய படை ஏவுகணை வீசி தாக்கி இருப்பதாக ஐநா அணுசக்தி மையம் உறுதி செய்துள்ளது. அணு மின் நிலையத்தின் பயிற்சி மையத்தை அது தாக்கியுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக அணு மின் நிலையத்தில் கதிர்வீச்சு கசிவு எதுவும் ஏற்படவில்லை என்றும் அது கூறியுள்ளது.
* இந்த சம்பவம் உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதால், தாக்குதல் நடத்தப்பட்ட செர்னோபிள், ஜாபோரிஜியா அணுமின் நிலையங்களில் ஐநா அணுசக்தி ஆய்வாளர்கள் குழு விரைவில் ஆய்வு நடத்த உள்ளது.
* ஜாபோரிஜியா அணுமின் நிலைய தாக்குதலில் 3 உக்ரைன் வீரர்கள் பலியாகினர். 2 வீரர்கள் காயமடைந்தனர்.

இந்திய மாணவர் மீது துப்பாக்கிச்சூடு: படுகாயத்துடன் சிகிச்சை
உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்தும் தாக்குதலில் ஏற்கனவே கர்நாடகாவை சேர்ந்த மாணவர் நவீன் பலியாகி விட்டார். பஞ்சாப்பை சேர்ந்த மற்றொரு மாணவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை கிடைக்காமல் இறந்தார். இந்நிலையில், தலைநகர் கீவ்வில் உள்ள மருத்துவ கல்லூரியில் படிக்கும் இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகாயம் அடைந்துள்ளர்.  போர் தீவிரமான நிலையில், கடந்த வாரம் கீவ் நகரில் இருந்து ரயில் மூலம் தப்பி, லீவ் நகருக்கு செல்ல இவர் முயன்றார். ஆனால், ரயிலில் ஏறுவதற்கு அவரை அந்நாட்டு மக்கள் அனுமதிக்கவில்லை. இதனால், சில நண்பர்களுடன் சேர்ந்து வேன் ஒன்றை வாடகைக்கு எடுத்து லீவ் நகரத்துக்கு புறப்பட்டார்.

கடந்த ஞாயிறன்று இந்த சம்பவம் நடந்தது. ஆனால், போகும் வழியில் வேன் மீது திடீரென சரசாரியாக துப்பாக்கியால் சுட்டதில் இவர் படுகாயமடைந்து மயங்கினார்.  கண் விழித்து பார்த்தபோது மருத்துவமனையில் இருந்தார். அவர் கூறுகையில், ‘‘இந்திய தூதரகத்துக்கு அருகில்தான் நான் சுடப்பட்டேன். கால் முறிந்து விட்டது. தோள்பட்டை, முழங்காலில் குண்டுகள் பாய்ந்தன. எங்களை கீவ் நகருக்கு வெளியே அழைத்து செல்லும்படி இந்திய தூதரக அதிகாரிகளை கெஞ்சினோம். ஆனால், சரியான பதில் இல்லை. மருத்துவமனையில் இருந்த போதும் பேசினேன். அவர்கள் என்னை கேள்விகள் கேட்டார்களே தவிர, உதவிகள் செய்யவில்லை,’’ என்றார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.