கொரோனா குறைந்துள்ளதால் வழக்கமான செயல்பாடுகளை தொடங்கலாம் – மத்திய அரசு தகவல்

கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது.இந்த தருணத்தில் டெல்லியில் நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் 15 முதல் 18 வயது வரையிலானவர்களில் 74 சதவீதத்தினர் முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளனர். 39 சதவீதத்தினர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கி வேகமாக அனைவருக்கும் போட்டு, ஏற்றுக்கொள்ளச்செய்ததால் இந்தியாவில் கொரோனா இறப்புகள் குறைவாக இருந்தன.
கொரோனாவால் ஏற்படும் இறப்பை தடுப்பதில் தடுப்பூசிகள் 98.9 சதவீதம் பயனுள்ளதாக இருக்கிறது. 2 டோஸ்களையும் போட்டுக்கொள்கிறபோது அது மரணத்துக்கு எதிராக 99.3 சதவீதம் பாதுகாப்பானது. 

கொரோனாவின் சமீபத்திய எழுச்சியை திறம்பட கட்டுப்படுத்த உதவியது சுகாதாரப்பாதுகாப்பு, முன்கள பணியாளர்களின் உழைப்பு, தடுப்பூசிகள்தான்.
தற்போது தடுப்பூசிகளால் இயக்கப்பட்ட கொரோனா வைரஸ் குறைந்த காலட்டத்தில் இருக்கிறோம். பள்ளிகள், கல்லூரிகள், ஓய்வு விடுதிகள், பொருளாதார நடவடிக்கைகளை திறக்கலாம். வழக்கமான செயல்பாடுகளை தொடங்கலாம். ஆனால் நாம் கவனமாகவும், விழிப்பாகவும் இருக்க வேண்டும்.

தற்போது நாட்டின் 29 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. 34 மாவட்டங்களில் 5 முதல் 10 சதவீதமாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.