கீழடி- யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடைக்காய் கண்டெடுப்பு

கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடத்து வரும் நிலையில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடைக்காய் கிடைத்துள்ளது. சிவகங்கை மாவட்டம், கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வு பணிகளை கடந்த 11-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நேற்று கீழடியில் பணிகள் நடைபெற்றபோது, 4 பாசி மணிகள் கண்டெடுக்கப்பட்டன. இதில் 2 பச்சை நிறமும், 2 ஊதா நிறத்திலும் உள்ளன. தொடர்ந்து குழி தோண்டிய போது நேற்று மாலையில் செவ்வக வடிவில் ஒரு பொருள் கிடைத்தது. அதனை ஆய்வு செய்த போது, அது யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடைக்காய் என தெரியவந்துள்ளது. இதுவரை தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் கன சதுர வடிவத்தில்தான் பகடைக்காய் கிடைத்து வந்தன. கீழடியில் முதன்முறையாக செவ்வக வடிவிலான தந்தத்தாலான பகடைக்காய் கிடைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.