ஜி-20 அமைப்புக்கு தலைமை ஏற்க தயாராகும் இந்தியா…!

சர்வதேச பொருளாதாரம் தொடர்பான முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண 20 நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பு செயல்படுகிறது. இதில், இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.இந்த அமைப்பின் தலைவராக ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் பதவி வகித்து வருகின்றன. வருகிற டிசம்பர் 1-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30-ந் தேதிவரை இந்தியா தலைமை பொறுப்பு வகிக்கிறது.இந்தநிலையில், தலைமை பொறுப்பை ஏற்பதற்கான ஏற்பாடுகளை இந்தியா தொடங்கி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், ஜி-20 அமைப்பின் தலைவர் பதவியை வகிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்காக ஜி-20 செயலகம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.இது வழக்கமான நடைமுறை ஆகும். ஜி-20 தலைமை பொறுப்பு தொடர்பான தொழில்நுட்பம், ஊடகம், பாதுகாப்பு, இதர வசதிகள் தொடர்பான பணிகளை கையாள்வதற்காக இந்த செயலகம் அமைக்கப்படுகிறது. மத்திய வெளியுறவு அமைச்சகம், மத்திய நிதி அமைச்சகம், இதர அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகளும், ஊழியர்களும் இந்த செயலகத்தில் பணியாற்றுவார்கள். 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்வரை செயலகம் இயங்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.