தி.மு.க பதவிகள் விற்பனைக்கு – மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

தமிழ்நாட்டு அரசியலுக்கும் போஸ்டருக்கும் எப்போதும் நீண்ட நெடிய உறவு இருந்து. போஸ்டர் ஒட்டுதல் காரணமாக அரசியலில் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன என்று கூட சொல்லலாம். குறிப்பாக போஸ்டர் ஒட்டுவதில் மதுரை முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. தி.மு.க தலைவராக கருணாநிதி இருந்த காலத்தில் மு.க.அழகிரி கட்சியில் இருந்தபோது மதுரையில் அவ்வப்போது ஒட்டப்படும் போஸ்டர்கள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும். அதேப்போல விஜயை முதல்வர் பதவியுடன் ஒப்பிட்டும் மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்தநிலையில், மதுரை மாநகர் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளராக முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் இருந்து வருகிறார். அவரது செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் மதுரை நகர் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.

அதில், “மாநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி பொறுப்பிற்கு ரூ.5 லட்சம், பகுதி செயலாளர் பொறுப்பிற்கு ரூ.3 லட்சம், மாவட்ட பிரதிநிதி பொறுப்பிற்கு ரூ.3 லட்சம், வட்ட செயலாளர் பொறுப்பிற்கு ரூ.2.50 லட்சம்” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், இந்த பதவிகளுக்கு “குண்டாஸ் பெற்றவர்கள்” தகுதி உடையவர்கள் என்றும், “உழைத்தவனுக்கு ஒன்றும் இல்லை, பணம் இருந்தால் கட்டாயம் பதவி உண்டு” என்ற வாசகங்களும் அந்த போஸ்டர்களின் இடம்பெற்றுள்ளன. “மதுரை மாநகர் வடக்கு மாவட்ட திமுக உண்மை தொண்டர்கள்” எனும் பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.