பத்திரிகையாளர்களுக்கான நலத்திட்டம்..

தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர்களுக்கான திட்டம்!

பத்திரிகையாளர்களுக்கான நலத்திட்டம்
தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர்களுக்கான திட்டம் என்பது தமிழ்நாட்டில் பத்திரிகை நிறுவனங்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கு தமிழ்நாட்டு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டம் ஆகும்.

செய்தியாளர் அடையாள அட்டை
ஒவ்வொரு பத்திரிகை நிறுவனத்திற்கும் 2 செய்தியாளர்கள், 1 புகைப்படக்காரர் என்கிற அளவிலும் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் 2 செய்தியாளர்கள், 2 ஒளிப்பதிவாளர்கள், 2 ஒளிப்பதிவு உதவியாளர்கள் ஆகியோர்க்குச் செய்தியாளர் அட்டைகள் வழங்கப்படுகின்றன.

பத்திரிகையாளர் அங்கீகார அட்டை
சென்னையில் ஒரு நாளிதழுக்கு 9 செய்தியாளர்கள், 2 புகைப்படக்காரர்கள் மற்றும் பிற மாவட்டங்களில் 2 செய்தியாளர்கள், 1 புகைப்படக்காரர் ஆகியோருக்கு பத்திரிகையாளர் அங்கீகார அட்டை வழங்கப்படுகிறது.

பயன்கள்
அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம்
ரயில் பயணங்களில் 50 சதவிகித கட்டணச் சலுகை,
ரயில் பயணங்களில் முன்னுரிமைப் பதிவுகள்
தொலைபேசி இணைப்புப் பெறுவதில் முன்னுரிமை
வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளில் முன்னுரிமை அடிப்படையில் சிறப்பு ஒதுக்கீடு
பத்திரிகையாளர் நலன்
பத்திரிகையாளர் ஓய்வூதியம்
இத்திட்டம் 1986 ஆம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பத்திரிகைத் துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றி, பணியிலிருந்து ஓய்வுபெற்று, நலிவுற்ற நிலையில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.6,000/- வழங்கப்பட்டது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பத்திரிகையாளர் நலனைக் கருத்தில் கொண்டு இந்த ஓய்வூதியத்தொகையை ரூ.7,500 ஆக உயர்த்தி வழங்க அறிவுறுத்தியபடி, 07.10.2013 அன்று அரசாணை வெளியிடப்பட்டு, தற்பொழுது உயர்த்தப்பட்ட பத்திரிகையாளர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியம்
ஓய்வூதியம் பெற்று இயற்கை எய்திய பத்திரிகையாளரின் மனைவிக்குக் குடும்ப ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ.3,000/- ஏற்கனவே வழங்கப்பட்டு வந்தது. மறைந்த பத்திரிகையாளர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இதனை ரூ.4,500 ஆக உயர்த்தி வழங்க அறிவுறுத்தியபடி, 07.10.2013 அன்று அரசாணை வெளியிடப்பட்டு, உயர்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி
பத்திரிகைத் துறையில் ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர், புகைப்படக்காரர் மற்றும் பிழை திருத்துபவர் ஆகியோர் பணியில் இருக்கும்போது இயற்கை எய்தினால் அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து கீழ்க்கண்டவாறு குடும்ப உதவி நிதி வழங்கப்பட்டு வருகிறது.

பத்திரிகையாளர் நல நிதியம்
பத்திரிகையாளர் நல நிதியத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிதி தனியே ஒதுக்கப்பட்டு, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் பணியிலிருக்கும் பத்திரிகையாளர்களுக்கு வைப்பீடு செய்யப்பட்டுள்ள தொகைக்கு கிடைக்கும். வட்டித் தொகையிலிருந்து அதிகபட்சமாக ரூ.50,000/- வரை மருத்துவ நிதி உதவி அளிக்கப்படுகிறது.

பத்திரிகையாளர்களுக்கு அரசு வாடகைக் குடியிருப்பு வசதி
பத்திரிகையாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் சிறப்பு அடிப்படையில் அரசு வாடகைக் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.

பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை வசதி
இத்திட்டத்தின் கீழ், பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனைகள் வழங்கப்படுகின்றன.

செய்தியாளர் அங்கீகார அட்டை
அரசு அமைக்கும் “செய்தியாளர் அங்கீகாரக் குழு”வின் பரிந்துரையின் பேரில் ஆண்டுதோறும் நாளிதழ்கள்/ தொலைக்காட்சிகள்/ செய்தி நிறுவனங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு, செய்தியாளர் அங்கீகார அட்டை (Accreditation Card) வழங்கப்பட்டு வருகிறது.

செய்தியாளர் அட்டை
காலமுறை இதழ்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு, “செய்தியாளர் அட்டை பரிந்துரைக் குழு”வின் பரிந்துரையின் பேரில் செய்தியாளர் அட்டைகள் (Press Pass) வழங்கப்பட்டு வருகின்றன.

இலவசப் பயண பேருந்து அட்டை
செய்தியாளர் அங்கீகார அட்டை வழங்கப் பெற்ற பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிப்பதற்கு வசதியாக அரசுப் பேருந்துகளில் பயணிக்க ஓராண்டு காலத்திற்குச் செல்லத்தக்க வகையில் இலவசப் பயண பேருந்து அட்டை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இலவசப் பயண பேருந்து அட்டைகள் வழங்குவதற்கான தொகையைப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு இத்துறை ஈடுசெய்கிறது.

ஆதாரம் : செய்தி மற்றும் மக்கள் தொடர்பு