கள்ளக்குறிச்சி விபத்தில் பலியான கர்ப்பிணி பெண் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்

கள்ளக்குறிச்சிஅருகே அவசர ஊர்தி டயர் வெடித்தவிபத்தில் பலியான கர்ப்பிணி பெண் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ. 5 லட்சம் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

இன்று காலை நிறைமாத கர்ப்பிணி பெண்ணை ஏற்றிச் சென்றஅவசர ஊர்தி கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் – அரிய பெருமானூருக்கு நடுவே உள்ள அய்யனார் கோவில் முன்பு சென்றுகொண்டிருந்த போது திடீரென டயர் வெடித்து சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கர்ப்பிணி பெண் ஜெயலட்சுமி, மாமியார் செல்வி, நாத்தனார் அம்பிகா ஆகியோர்உயிரிழந்தனா்.

இந்நிலையில் விபத்தில் பலியானவர்களுக்கு நிவாரணம் அறிவித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி காவல் நிலைய சரகத்தில் இன்று (10.6.2021) அதிகாலை வடபொன்பரப்பி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து,ஜெயலட்சுமி என்பவர் பிரசவத்திற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டார்.

அவருடன் அவரது மாமியார் செல்வி, நாத்தனார் அம்பிகா ஆகியோரும் உடன் வந்த போது, கள்ளக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலத்தூர் ஏரி, அரிபெருமானூர் ஏரிக்கரை அருகே, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் டயர் வெடித்து மரத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில், ஜெயலட்சுமி மருத்துவமனைக்கு வரும் வழியிலும், அவரது மாமியார் மற்றும் நாத்தனார் சம்பவ இடத்திலேயும் இறந்துவிட்டனர்.

இந்தத் துயர சம்பவத்தை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், மிகவும் வேதனையுற்று தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, இச்சம்பவத்தில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் ஜெயலட்சுமியின் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாயும்,

அவருடன் உயிரிழந்த அவரது மாமியார்செல்வி மற்றும் நாத்தனார்அம்பிகா ஆகியோர் குடும்பத்திற்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.

அதோடு, விபத்தில் உயிரிழந்த இம்மூவருக்கும் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சேர வேண்டிய பணப் பயன்களைப் பெற்று வழங்கவும் ஆணையிட்டுள்ளார்கள். தமிழ்மலர் செய்திகளுக்காக செய்தியாளர் காளிதாஸ்