கயத்தாறு பகுதியில் லாரி டயர்களை திருடியவர் கைது – டயர்கள் மற்றும் லோடு வாகனம் பறிமுதல்.!

கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசன்குளம் தெற்குத்தெருவைச் சேர்ந்த அங்கையா மகன் ராமர் (32) என்பவர் கயத்தாறு மதுரை மெயின் ரோட்டில் ஜே.சி.பி மற்றும் டிப்பர் லாரி அலுவலகம் வைத்து தொழில் செய்து வருகிறார்.

கடந்த 06.08.2020 அன்று மேற்படி லாரி ஆபிஸ் முன்பு நிறுத்தி வைத்திருந்த டிப்பர் லாரியில் உள்ள லாரி டயர்களை டிஸ்க்குடன் கழற்றி திருடிச் சென்றுள்ளார். இது குறித்து ராமர் 21.11.2020 அன்று அளித்த புகாரின் பேரில் கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் உத்தரவுப்படி உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர் நாராயணசாமி, தலைமைக் காவலர் முருகன், முதல் நிலைக் காவலர் ஸ்ரீராம், காவலர் கணேஷ், ஊர்க்காவல் படை வீரர் செல்லத்துரை ஆகியோர் அடங்கிய போலீசார்

தெற்கு இலந்தக்குளத்தில் வாகனங்கள் பழுது பார்க்கும் ஒர்க்ஷாப்புகள் இருக்குமிடம் அருகே ரோந்து சென்ற போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியைச் சேர்ந்த முனியசாமி மகன் முருகன் (21) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில்,

மேற்படி 8 லாரி டயர்களை திருடியதை ஒப்புக் கொண்டார். பின்னர் போலீசார் அவரை கைது செய்து தூத்துக்குடியில் அவர் வீட்டிற்கு பின்பகுதியில் மறைத்து வைத்திருந்த ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள 8 டயர்கள் மற்றும் டயர்கள் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட லோடு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தமிழ்மலர் செய்திகளுக்காக செய்தியாளர் கலைவேந்தன்