இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் நான்கு 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இந்த இரு அணிகளிடையேயான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான 20 ஓவர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகளை கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. 

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

அதன்படி, பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரிஸ்வான் மற்றும் சர்ஜூல் கான் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரை தென் ஆப்பிரிக்க வீரர் ஜார்ஜ் லிண்டி வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே ரிஸ்வான் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார்.

இதையடுத்து, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் களமிறங்கினார். ஆனால், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சர்ஜூல் கான் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜார்ஜ் லிண்டி ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்துவந்த ஹபீஸ் கேப்டன் பாபருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 23 பந்துகளை சந்தித்த ஹபீஸ் 32 ரன்கள் குவித்து ஜார்ஜ் லிண்டி பந்து வீச்சில் வெளியேறினார். சற்று நிலைத்து நின்று ஆடிய கேப்டன் பாபர் ஆசம் அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்து மஹலா பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.

அடுத்து வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடாமல் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர். இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் அதிகபட்சமாக ஜார்ஜ் லிண்டி, வில்லியம்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 141 ரன்கள் எடுத்த வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக மாலன் மற்றும் மார்க்ரம் களமிறங்கினர். 10 பந்துகளில் 2 சிக்சர்கள் உள்பட 15 ரன்கள் எடுத்திருந்த மாலன், ஹசன் அலி பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய லூபி 12 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஹஸ்னானின் பந்துவீச்சில் வெளியேறினார். 

அடுத்துவந்த கேப்டன் கால்சன், மார்க்ரமுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 30 பந்துகளை சந்தித்த மார்க்கரம் 3 சிக்சர்கள் உள்பட 54 ரன்கள் எடுத்த நிலையில் உஸ்மான் ஹதீர் பந்துவீட்டில் அவுட் ஆனார். ஆனால், 14 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழந்த நிலையில் வெற்றி இலக்கான 141 ரன்களை தென் ஆப்பிரிக்கா எட்டியது.

செய்தியாளர் ரசாக்

தமிழ்மலர் மின்னிதழ்