இறப்பிலும் இணைபிரியாத இந்து முஸ்லீம் நண்பர்கள்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜூபிலி தெருவில் வசித்து வருபவர் மகாலிங்கம். இவர் தெருவின் அருகே உள்ள காளியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். இவர் சிறிய டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வீட்டின் எதிர் புறம் வசித்து வருபவர் ஜெயினுலாபுதின். இவர் தெருவில் ஒரு ரைஸ்மில் நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக இணைபிரியா நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். மகாலிங்கம் வீட்டில் சுப காரியங்கள் நடந்தாலும் பண்டிகை காலங்களாக இருந்தாலும் ஜெயிலா புதீன் கலந்து கொள்வார். அதுபோல் ஜெய்லாபுதீன் வீட்டில் சுபகரியங்கள் பண்டிகை காலங்களிலும் மகாலிங்கம் கலந்து கொண்டு உணவு பதார்த்தங்களை இருவரும் பரிமாறிக் கொள்வார்கள்.

இருவருமே நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் ஜெயங்கொண்டம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர்‌. அருகருகே இருந்த படுக்கையில் சிகிச்சை பெற்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் பின் ஒருவராக அரை மணி நேரத்திற்குள்ளாக இறந்தனர்.

இதுகுறித்து இருவரின் குடும்பத்தினர்கள் கூறும்போது, “எங்களின் தாத்தா முதல் தலை, முறை தந்தை இரண்டாம் தலை முறை, இதை தொடர்ந்து நாங்களும் மூன்றாவது தலைமுறையாக இதேபோல் ஒற்றுமையாக இருப்போம். இதேபோல் உற்றார் உறவினராக சுப துக்க காரியங்களில் ஒன்றிணைந்து மதங்களை கடந்து நாங்கள் நட்பை தொடர்வோம். எங்களின் தாத்தா தந்தை ஆகியோரின் ஆசையும் அது தான்” என்று கூறினர்.

செய்தியாளர் ரசூல்

தமிழ்மலர் மின்னிதழ்