சீனா கட்டுமானப் பணிகள் – மத்திய அரசு பதில்.

இந்தியாவுடனான எல்லைப் பகுதிகளில் சீனாவின் கட்டுமானப் பணிகள் குறித்த தகவல்களுக்கு மத்திய அரசு பதிலளித்து உள்ளது.

புதுடெல்லி

இந்தியா – சீனா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த ஆண்டு லடாக் எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இரு பக்கமும் உயிரிழப்பு ஏற்பட்டது.

அதன்பின் பல கட்டங்களாக பல தரப்பினருக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. என்றாலும், சீனா பின்வாங்குவதில் தயக்கம் காட்டியது.

இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநில எல்லையிலும் பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த நிலையில் சுபான்ஸ்ரீ மாவட்டத்தில் உள்ள டிசாரி சூ ஆற்றங்கரையோரத்தில் சீனா 101 வீடுகளை கொண்ட ஒரு புதிய கிராமத்தையே கட்டி முடித்துள்ளது. இந்திய பகுதியுடன் கூடிய சுமார் 4.5 கி.மீட்டரில் இந்த கிராமம் அமைந்துள்ளதால் இந்தியாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த இடத்தில் வீடுகள் கட்டுவதற்கான எந்த செயல்பாடும் தென்படவில்லை. ஆனால், கடந்த ஆண்டு நவம்பர் மாத செயற்கைகோள் படத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எல்லை அருகில் இந்தியா அதிகமான கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. ராணுவத்தை குவித்து வருகிறது என சீனா குற்றம்சாட்டியிருந்தது. ஆனால், தற்போது சீனா கட்டியுள்ள கிராமம் அருகில் இந்தியா எந்தவொரு கட்டமைப்பையும் உருவாக்கவில்லை.

இந்தியாவின் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் அனைத்து முன்னேற்றங்களையும் அரசாங்கம் தொடர்ந்து கண்காணிப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. 

இந்தியாவுடனான எல்லைப் பகுதிகளில் சீனா கட்டுமானப் பணிகளை மேற்கொள்கிறது என்ற தகவல்களுக்கு  பதிலளித்த வெளிவிவகார அமைச்சகம் (எம்.இ.ஏ) இந்தியா “அதன் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என கூறியது.

இதுகுறித்து வெளிவிவகார அமைச்சகம்  அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியாவுடனான எல்லைப் பகுதிகளில் சீனா கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது குறித்த சமீபத்திய அறிக்கைகளை நாங்கள் பார்க்கிறோம்  . கடந்த பல ஆண்டுகளில் இதுபோன்ற உள்கட்டமைப்பு கட்டுமான நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டுள்ளது .

இதற்கு பதிலளிக்கும் விதமாக, நமது அரசாங்கமும் சாலைகள், பாலங்கள் போன்றவற்றை நிர்மாணிப்பது உள்ளிட்ட எல்லை உள்கட்டமைப்பை முடுக்கிவிட்டுள்ளது, இது எல்லையில் உள்ள உள்ளூர் மக்களுக்கு மிகவும் தேவையான இணைப்பை வழங்கியுள்ளது. எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தில் அரசாங்கம் உறுதியாக உள்ளது .

இந்தியாவின் பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் அனைத்து முன்னேற்றங்களையும் அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது மற்றும் அதன் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறது என கூறினார்.

ரஹ்மான், செய்தியாளர், தமிழ் மலர் மின்னிதழ்.