ஜோ பைடன் பதவியேற்பு விழாவிற்கு முன் டிரம்ப் அதிரடி உத்தரவு?

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ள நிலையில் வாஷிங்டனில் அவசர நிலை அமுல்படுத்துவதற்கான உத்தரவை டொனால்டு டிரம்ப் பிறப்பித்துள்ளார்.

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் வருகிற 20-ம் தேதி பதவி ஏற்க உள்ளார். அதற்கு முன்பாகவே டிரம்ப்பை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க ஜனநாயக கட்சியினர் தீவிரமாக உள்ளனர்.

கடந்த 6-ம் தேதி ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியது. அப்போது டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்து பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்த கலவரத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட 5 பேர் பலியானார்கள்.

குறித்த வன்முறை சம்பவத்திற்கு டிரம்ப் காரணம் என்றும் அவர் தனது ஆதரவாளர்களை தூண்டியதாகவும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து அவரை ஜனாதிபதி பதவியில் இருந்து 25-வது சட்ட திருத்தத்தை பயன்படுத்தி நீக்க வேண்டும் என்று ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.

இதையடுத்து 25-வது சட்ட திருத்தத்தை ஜனநாயக கட்சியினர் கொண்டு வந்தனர். ஆனால் அதற்கு குடியரசு கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அந்த பிரேரணை நிறைவேறவில்லை. இந்த நிலையில் ஜனநாயக கட்சியினர் 2-வது முறையாக டிரம்புக்கு எதிரான பிரேரணையை கொண்டு வர முடிவு செய்துள்ளனர். நாடாளுமன்றம் இன்று கூடி ஜனாதிபதிக்கான அதிகாரங்களை பறிக்க வகை செய்யும் 25-வது சட்ட திருத்தம் மீது முடிவெடுக்கும்.

அந்த அடிப்படையில் டிரம்பை பதவி நீக்கும் தீர்மானம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மீது நாடாளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வன்முறையை தொடர்ந்து தலைநகர் வாஷிங்டனில் பொது அவசரநிலை அமுல்படுத்தப்பட்டு இருந்தது.

மட்டுமின்றி, ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்கும் 20-ம் தேதி ஆயுதங்களுடன் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்க புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் தலைநகர் வாஷிங்டனில் அவசரநிலையை அறிவித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த அவசர நிலை வருகிற 24-ம் தேதி வரை அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வன்முறையை தடுக்கும் விதமாக டிரம்பின் ஆதரவாளர்கள் 70 ஆயிரம் பேரின் டுவிட்டர் கணக்குகளை அந்த நிறுவனம் முடக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்