கொரோனா தடுப்பூசி ஒத்திகை திருப்தி

கொரோனா தடுப்பூசி ஒத்திகைக்காக தனி குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒத்திகையில் பங்கேற்க இருப்போரின் விவரங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டன. அவர்களுக்கு செல்போன் மூலம் தடுப்பூசி செலுத்தும் நேரம், இடம் தொடர்பான விவரங்கள் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்பட்டன.

அந்தந்த மையங்களுக்கு அவர்கள் வரவழைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் ஒத்திகைகள் நடைபெற்றன. அந்த மையங்களிலேயே குறிப்பிட்ட 30 நிமிட நேரத்துக்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். அவர்களது தகவல்கள் ‘கோ-வின்’ என்ற மத்திய அரசின் புதிய வலை தளத்தில் சேமித்து வைக்கப்பட்டன. அவர்களை தொடர்ந்து கண்காணிப்பில் வைப்பது தொடர்பாகவும் ஒத்திகை நடத்தப்பட்டது.

தடுப்பூசியை குறிப்பிட்ட குளிர்பதன நிலையில் சேமிப்பது, தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு அதை கொண்டு வந்து வினியோகிப்பது உள்ளிட்டவை குறித்தும் ஒத்திகை நடத்தப்பட்டது. தடுப்பூசி ஒத்திகை தொடர்பாக 4 மாநிலங்களும் திருப்தி தெரிவித்தன.

முதல்கட்டமாக 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதில் சுமார் 1 கோடி சுகாதார பணியாளர்கள், சுமார் 2 கோடி முன்கள பணியாளர்கள், வயது அடிப்படையில் 27 கோடி பொதுமக்கள் ஆகியோர் அடங்குவர்.